06 February, 2010 by admin
ஈழத்தமிழர்கள் பலரும் அகதிகளாக கடல்வழியாக அவுஸ்திரேலியா நோக்கிச் செல்வது தொடர்ந்து கொண்டே உள்ளது. இவ்வாறு அவுஸ்திரேலியா நோக்கிச் சென்ற படகொன்று கிறிஸ்மஸ் தீவுக்கு சமீபத்திய கடலில் பெரும் ஆபத்துக்கு உள்ளானது. எனவே படகிலிருந்து கிடைத்த அபாய சமிக்ஜைகளை அடுத்து அகதி செயற்பாட்டாளர்கள் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். இதன்பின்னர் சனிக்கிழமை மாலையில் அப்படகில் இருந்த 45 இலங்கை அகதிகளையும் மீட்ட அவுஸ்திரேலிய கரையோரப் பாதுகாப்புப் படையினர் அவர்களைப் பத்திரமாக கிறிஸ்மஸ் தீவுக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
மேற்படி படகானது ஜனவரி 20 ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டதாகவும், இப்போது எரிபொருள் தீர்ந்து போன காரணத்தால் கடலில் தத்தளித்ததாகவும் தமக்குக் கூறப்பட்டுள்ளதாக அகதிகள் செயற்பாட்டாளர் ரிண்டால் கூறினார். 45 அகதிகளும் கடந்த 4 நாட்களாக உணவோ தண்ணீரோ இல்லாமல் வெகுவாகச் சோர்ந்து காணப்படுவதாகவும், இருவருக்கு அம்மை மற்றும் வயிற்றோட்டம் இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.