07 February, 2010 by admin
ஜப்பானிய மக்களும், கொழும்பில் இயங்கும் ஜப்பானிய நிறுவனங்களும் சேர்ந்து வவுனியா இடம்பெயர் மக்கள் உள்ள மெனிக் பார்ம் முகாமிலுள்ள முன்பள்ளிச் சிறுவர்களுக்கென 18 நடமாடும் நூலகங்களை அன்பளிப்புச் செய்கிறார்கள். சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சினதும் வடமாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறியினதும் உதவியுடன் இந்த நடமாடும் நூலகங்கள் நாளை திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாகக் வழங்கப்படுகின்றன என கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி வழங்கப்படும் நூலகங்களில் 'அலி பாஞ்சா' என்ற திட்டத்தின் கீழ் சேகரிக்கப்பட்ட படங்களின் தொகுப்புகள் அமைந்த நூல்கள் அமைந்துள்ளன எனவும், அவை பல்வேறுபட்ட ஆசிரியர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டதாகவும் கூறும் ஜப்பான் தூதரகம், இந்த நூலகத்தால் முன்பள்ளிச் சிறுவர்களுக்கு நல்ல பயன் கிட்டும் எனவும் தெரிவித்துள்ளது.
வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறியிடம் இந்த நூலகங்கள் கையளிக்கப்படும். ஜப்பானிய மக்களின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த நடவடிக்கையாக இந்த நூலகங்கள் அமையும் என ஜப்பானிய மக்கள் நம்புவதாகவும் கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பதைப் பற்றி ஜப்பானிய மக்கள் மத்தியில் கலந்துரையாடியதில் நடமாடும் நூலகம் வழங்கும் திட்டம் சிறப்பானதெனத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் அமைந்துள்ள இந்த வண்ணமயமான புத்தகங்களை சிறுவர்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்று சில நாட்கள் வைத்திருந்து படிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த் நடமாடும் நூலகமானது இதுவரை மட்டக்களப்பு, மொனராகலை, எம்பிலிப்பிட்டிய, பாஸ்கொடா ஆகிய இடங்களுக்கு இதுவரை சென்றுள்ளது. இதனால் கிட்டத்தட்ட 350 முன்பள்ளிகளும் 400 ஆசியர்களும் பயன்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.