08 February, 2010 by admin
கடந்த 4 ஆம் திகதி இலங்கையிலும், பல நாடுகளிலும் உள்ள இலங்கைத் தூதரகத்திலும் இலங்கையில் 62 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் நடந்தன. அன்றைய தினம் அவுஸ்திரேலிய நாடாளுமன்றக் கூட்டத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் முர்பி தனது பதிவுசெய்யப்பட்ட பேச்சில் இலங்கைத் தமிழர்களின் அவலங்களையும், இலங்கைமீது ஒருதலைப்பட்சமற்ற விசாரணை செய்யப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார். இலங்கை அரசாங்கம் தனது வெற்றியைப் பிரகடனப்படுத்தியுள்ள போதும் அங்கு அவசியமாகவுள்ள அரசியல் தீர்வை முனவைக்கும் வரை இலங்கையில் சமாதானம் ஏற்படவில்லை என்றும் சண்டையில் இலங்கை வென்றுவிடவில்லை எனவும் சர்வதேச சமூகம் தனது கவலையை வெளிக்காட்டியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ள நா.உ, இலங்கை அரசாங்கம் சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமனச் சட்டங்களை மீறியுள்ளமைக்காக விசாரணை செய்யப்படவேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
போரின் முடிவானது 3 லட்சம் மக்களை இடம்பெயர்த்து அரச முகாம்களுக்கு அனுப்பியது. அரச படைகளின் ஆட்டிலரி ஷெல்கள் குடிமனைகள், பாடசாலைகள், மருத்துவமனைகள் ஆகியவற்றை அழித்தன. ஐ.நா அறிக்கையின்படி கடைசிநேர போரில் 20,000 தமிழர்கள் ஷெல்களால் கொல்லப்பட்டுள்ளன, 7000 பேர் பாதுகாப்பு வலயத்தில் வைத்துக் கொல்லப்பட்டுள்ளனர். மே 19, 2009 வரை சராசரியான தினமும் 1000 பேர் வீதம் அரச படைகளின் எறிகணைகளில் கொல்லப்பட்டுள்ளனர் எனச் சுட்டிக்காட்டியுள்ளார் நா.உ முர்பி.
அதோடு, ஜனவரி மாதம் டப்ளின் நிரந்தர மக்கள் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்ட இலங்கை விவகாரத்தின் பின்னர் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே ஐக்கிய நாடுகள் தலைமையில் இலங்கையை விசாரணை செய்யவேண்டும் எனவும், இதற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் எனவும் தாம் கோருவதாகக் கூறியுள்ளார் முர்பி.