08 February, 2010 by admin
ஜனாதிபதித் தேர்தலில் தமது பொது வேட்பாளர் என சரத் பொன்சேகாவை நிறுத்தி ஒற்றுமையாகப் போட்டியிட்ட எதிர்க்கட்சிகள், வரப்போகும் பொதுத்தேர்தலில் யானையையா அல்லது அன்னப்பறவையையா தமது சின்னமாகக் கொள்வது என்பதில் குழம்பிப் போயுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியினர் தமது சின்னமான யானைச் சின்னத்தில் போட்டியிட அதிக நாட்டம் காட்டுவதாகவும், ஆனால் அதை ஜே.வி.பி இனர் பெரிதாக விரும்பவில்லை எனவும் அன்னபட்சி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என விரும்புவதாகவும் அறியப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டியிட்டால், ஜெனரல் சரத் பொன்சேகா மற்றம் ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் ஜே.வி.பி அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிடக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிடுமாறு ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரையில் அவர் எவ்வித பதிலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே சின்னம் விடயமாக தாம் பலகட்டப் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக ஐ.தே.க பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா கூறியுள்ளார். நாளை செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சிகள் அனைத்தினதும் உறுப்பினர்கள், மாகாண ஒழுங்கமைப்பாளர்கள் அனைவரும் ஒன்று கூடிப் பேசவுள்ளதாகக் கூறிய அவர், வருகின்ற 11 ஆம் திகதி ஐ.தே.க இன் செயற்குழு கூடவுள்ளதாகவும் அந்தக் கூட்டத்திலேயே இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.