08 February, 2010 by admin
அரசாங்கத்தை கவிழ்க்கவும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் படுகொலை செய்யவும் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா சதித்திட்டம் தீட்டினார் என்று அவர்மீது குற்றம் சாட்டி அவரை ராணுவ நீதிமன்றில் விசாரணை செய்ய இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முயற்சி செய்வதாக இலங்கை வாராந்த ஆங்கிலப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சட்ட மா அதிபருடன் இது குறித்துப் பேசி ஆலோசனையைப் பெற்றுக்கொண்டதன் பின்னரே இந்த முடிவுக்கு புலனாய்வுப் பிரிவினர் வந்துள்ளதாகவும் சாதாரண சட்டங்களின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படும் எனவும் மேற்கொண்டு தெரியவந்துள்ளது.
சரத் பொன்சேகா ராணுவத் தளபதியாக கடமையாற்றிய போது மேற்கொண்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் அதிகளவு முறைப்பாடுகள் காணப்படுகின்றனவாம். போர் நடந்தபோது அவர் தனது மருமகன் தனுன திலகரட்ணவின் ஆயுத நிறுவனம் மூலம் பெருமளவு பணத்தை லாபமாகப் பெற்றார் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். எனவே அவரின் மருமகனிடம் எதிர்வரும் நாட்களில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகள் நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் தாம் எந்தக் குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை எனவும், அரசாங்கம் தம்மை பழிவாங்குவதற்காகவே இவ்வாறு நடந்து வருவதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதேவேளை சரத் ஆதரவாளர்கள் 37 பேர் ஏற்கனவே புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாகியுள்ளனர்.
சரத்துக்கு எதிராக ராணுவ நீதிமன்றில் மேற்கொள்ளப்படும் வழக்கு விசாரணைகள் பகிரங்கப்படுத்தப்பட மாட்டாது எனவும், சிறைத்தண்டனை விதிக்கவோ அல்லது மரண தண்டனை விதிக்கவோ ராணுவ நீதிமன்றிற்கு அதிகாரம் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.