08 February, 2010 by admin
சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளை சுட்டுக்கொல்லவில்லை என விளக்கமளிப்பதற்காக இலங்கையின் மனித உரிமைகள் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவுக்கு பயணமாகியுள்ளார்.
அவர் அங்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்திக்கவுள்ளார்.
இதன்போது முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டதாக கூறப்பட்ட வெள்ளைக்கொடிகளுடன் சரணடைய வந்த தமிழீழ விடுதலைப்புலிகளை இலங்கைப் படையினர் சுட்டுக்கொன்றனர் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, நவநீதம்பிள்ளைக்கு விளக்கமளிக்கவுள்ளார்.
சரத் பொன்சேகா கூறியதாக கூறப்படும் இந்தக் குற்றச்சாட்டு, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை மீதான மனித உரிமை மீறல் விசாரணைகளுக்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தின் காரணமாகவே அமைச்சர் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார். அமைச்சருடன் இந்த விஜயத்தில் இலங்கையின் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸும் இணைந்துள்ளார்.
இதேவேளை இலங்கை படையினர் மீது ஐக்கிய நாடுகள் சபை உட்பட்ட எந்த அமைப்பு விசாரணைக்காக வந்தாலும் அதனை அனுமதிக்கப் போவதில்லை என அண்மையில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.