கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி தருமபுரியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி ஒரு பள்ளியில் பிளஸ்- 1 படித்து வருகிறார். அந்த உறவினரின் மகள் கவிதா (வயது 45), மருமகன் ஓம்சக்தி (40) ஆகியோர் அங்கு வசித்து வந்தனர். மாணவியை டெம்போ டிரைவரான ஓம்சக்தி வலுக்கட்டாயமாக வீட்டில் உள்ள மாடிக்கு அழைத்துச் சென்று அவருடைய வாயில் துணியை வைத்து அடைத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இதற்கு கவிதாவும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி வெளியில் சொல்லக்கூடாது என்று மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அங்கிருந்து பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கே தனது தந்தையிடம் இதுபற்றி கூறினார். இதுதொடர்பாக தருமபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இதைத் தொடர்ந்து போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஓம்சக்தி, அவருடைய மனைவி கவிதா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்ட சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.