லிமா: கல்லறையில் சவப்பெட்டி திடீரென அசைந்ததை பார்த்து, ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அலறியடித்து கொண்டு ஓடியுள்ளார்கள்..!
இந்தியாவில் சடலங்களை புதைக்கும்போது, கடைசி நேரத்தில் எத்தனையோ அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்துள்ளன.. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பின்னணியை கொண்டதாக இருந்தாலும், பரபரப்பை நிச்சயம் ஏற்படுத்திவிடும்.
இப்படித்தான், ஒரிசாவில் கடந்த வருடம் ஒரு சம்பவம் நடந்தது.. மாலிக் என்பவர் ஆடு மேய்க்க போனார்.. ஆனால், வீட்டுக்கு திரும்பி வரவேயில்லை.. நடுரோட்டில் மயங்கி கீழே விழுந்துவிட்டார்.
இதை பார்த்ததும், மாலிக் இறந்துவிட்டதாக கூறி, குடும்பமே ஒன்று சேர்ந்து ஒப்பாரி வைத்தது. எல்லா சொந்தக்காரர்களுக்கும் சொல்லி அனுப்பியது. ஊரே திரண்டு வந்து மாலிக்குக்கு இறுதி சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டு, மயானத்துக்கும் கண்ணீருடன் கொண்டு சென்றுள்ளனர். குழிக்குள் வைக்கும்போது, மாலிக்கின் தலை சட்டென அசைந்ததை பார்த்து மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பிறகுதான் கடுமையான ஜுரத்தினால் உடல் பலவீனமாகி மயக்கம் போட்டு விழுந்துள்ளார் என்று டாக்டர்கள் சொன்னார்கள்.
இப்படித்தான், நம்ம ஈரோட்டிலும் ஒரு சம்பவம் நடந்தது.. ஆனால், சடலமே இல்லாமல் இறுதிசடங்கை நடத்திவிட்டார்கள்.. சத்தியமூர்த்தி என்பவர் கரும்பு வெட்ட கர்நாடகம் போனவர், வீட்டுக்கு திரும்பி வரவேயில்லை.. பிறகு பஸ்ஸ்டாண்டில் கிடந்த அழுகிய சடலம், சத்தியமூர்த்திதான் என்று நினைத்து, அதை கொண்டு வந்து வீட்டில் வைத்து இறுதி அஞ்சலி செய்து புதைத்துவிட்டு வந்தனர்.. அன்றைக்கு நள்ளிரவே நிஜமான சத்தியமூர்த்தி வீட்டிற்குள் வந்து நின்றதை பார்த்து தெறித்து ஓடினார்கள் குடும்பத்தினர்.
பெரு நாட்டிலும் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.. ஆனால், சோகத்துடன் முடிந்துவிட்டது.. லம்பெகியூ பகுதியை சேர்ந்தவர் ரோசா இசபெல் சிஸ்பெடி காலஹா.. ரோசாவுக்கு 36 வயதாகிறது.. கடந்த 26-ம் தேதி இவரது கார் விபத்துக்குள்ளாகியது.. காரில் இருந்தவர்கள் அனைவரும் படுகாயமடைந்து சிகிச்சைக்காகவும் அனுமதிக்கப்பட்டனர்.. அப்போது ரோசாவும் இன்னொரு நபரும் இறந்துவிட்டதாக பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்.
இதனால் 2 பேருக்கும் இறுதி சடங்கு செய்ய முடிவானது.. அதற்காக சவப்பெட்டியை தயார் செய்து, அதில் ரோசா சடலத்தையும் தூக்கி வைத்தனர்.. பிறகு, சவபெட்டியை மூடி, கல்லறைக்கு கொண்டு வந்தனர்.. அடக்கம் செய்யலாம் என்று சவப்பெட்டியை திறக்க முயன்றபோது, சவப்பெட்டி திடீரென அசைந்தது.. இதனால் அதிர்ந்து போன உறவினர்கள், சவப்பெட்டியை திறந்து பார்த்தபோது, ரோசா கண்விழித்துள்ளார்..
மேலும், அந்த சவப்பெட்டியை உதைத்துள்ளார்… இதனால் வெலவெலத்து போன உறவினர்கள் உடனடியாக போலீசுக்கு விஷயத்தை சொன்னார்கள்.. அவர்கள் விரைந்து வந்து, சவப்பெட்டியுடனேயே ரோசாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது… ஆனால், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் ரோசா நிஜமாகவே இறந்துவிட்டார்.
இதனால் உறவினர்கள் உச்சக்கட்ட ஆத்திரம் அடைந்தனர்.. முதலிலேயே ஒழுங்காக பரிசோதித்து சிகிச்சை தந்திருந்தால், ஒரு உயிர் அநியாயமாக பறி போயிருக்காதே என்று கொந்தளித்து அந்த டாக்டருக்கு எதிராக போராட்டம் நடத்தினர். உண்மையிலேயே அப்போது ரோசா கோமாவில் இருந்துள்ளார்.. அப்போது அவருக்கு உயிர் இருந்துள்ளது.. மீண்டும் ரோசாவின் சடலத்தை அதே இடத்தில் கொண்டு போய் அடக்கம் செய்தனர் உறவினர்கள்..!