அக்காவை பலாத்காரம் செய்த வாலிபரை பொதுமக்கள் முன்னிலையில் அடித்து கொலை செய்திருக்கிறார் தம்பி. அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தருமபுரி மாவட்டத்தில் நல்ல பள்ளி அடுத்த பாலஜங்கமன அள்ளி கிராமம். கிராமத்தைச் சேர்ந்தவர் சென்னன். இவரது சகோதரி உமா. நேற்று உமா ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் உமாவின் கையை பிடித்து இழுத்திருக்கிறார். உமா கையை உதறித்தள்ளவே, அவரை வலுக்கட்டாயமாக தூக்கிசென்றிருக்கிறார். மறைவான இடத்திற்கு சென்றதும் உமாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்திருக்கிறார். உமா கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கவும் அவரை கடுமையாக தாக்கி விட்டு பாலியல் தொந்தரவு செய்ய முயற்சி செய்திருக்கிறார்.
அப்போது உமா போட்ட அலறலில் கிராமத்தில் இருந்தவர்கள் ஓடிவந்துள்ளனர். அதைப்பார்த்ததும் ராஜேஷ் தப்பி ஓடியிருக்கிறார். அவரை பொதுமக்கள் விரட்டி பிடிக்க முயற்சித்து இருக்கிறார்கள். ஆனாலும் இங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார்.
இதன் பின்னர் காயமடைந்து கிடந்த உமாவை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் அப்பகுதி மக்கள். மது போதையில் ராஜேஷ் என்ற செயலை செய்திருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார் ராஜேஷ். இதை பார்த்த உமாவின் தம்பிக்கு ஆத்திரம் வந்து அங்கிருந்த இரும்பு ராடை எடுத்து ராஜேஷ் மண்டையில் ஓங்கி அடித்திருக்கிறார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ராஜேஷை மருத்துவ ஊழியர்கள் வந்து மீட்டு மருத்துவமனைக்கு தூக்கி சென்று இருக்கிறார்கள். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் , ராஜேஷ் ஏற்கனவே உயிரிழந்த விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதன் பின்னர் போலீசார் வந்து பார்வையிட்டு விசாரணை செய்து சென்னனை கைது செய்துள்ளனர்.
அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் முன்னிலையில் தன் அக்காவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை இரும்புராடால் அடித்து கொலை செய்த தம்பியின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.