குன்றத்தூர் அருகே நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்து இளம் பெண்ணை தாக்கி கற்பழிக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குன்றத்தூர் அடுத்த கோவூர் பகுதியில் உள்ள வீட்டில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 22 வயதுடைய பெண் தனது அறையில் இருந்த போது உள்ளே நுழைந்த மர்ம நபர் அந்த பெண்ணை கட்டையால் தாக்கி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த நபர் அங்கிருந்து சென்று விட்டதாகவும் இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து காயமடைந்த இளம் பெண்ணை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர் பெண் என்பதால் அவரிடம் பெண் போலீசார் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றனர். நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த நபர் தன்னை கட்டையால் தாக்கி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் பின்னர் தன்னை மிரட்டி விட்டு சென்றதாகவும் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். தற்போது இளம் பெண் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் இந்த வழக்கு தாம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வீட்டிற்குள் நுழைந்து இளம் பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று மிரட்டி விட்டு சென்ற நபர் யார்? முன் விரோதம் ஏதாவது உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.